பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிப்பு
ரூ.2 கோடி பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 1991-1996-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு அவர் தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான பரிசுகளை பொருட்களாகவும், ரொக்கமாகவும் வழங்கினார்கள்.
அப்போது, ரூ.2 கோடி 9 லட்சத்து 50 ஆயிரம் அவருக்கு கேட்பு காசோலை மூலமாக பரிசாக வழங்கப்பட்டது. முதல்அமைச்சராக பதவி வகிக்கும் நபர், தனக்கு பரிசாக கொடுக்கப்படும் பெரும் தொகையை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், ஜெயலலிதா அந்த தொகையை தன்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தி எடுத்துக் கொண்டார். இது குறித்து 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நீண்ட காலமாக சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்யவில்லை. இதனால், சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
10 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதா, அழகு திருநாவுகரசு, செங்கோட்டையன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா உட்பட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்குப்பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சட்டப்படி தவறாகும் என்று கூறி, இதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளையும் தாக்கல் செய்திருந்தனர்.










