குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 என்ற விகிதாச் சாரத்தில் தேர்வானவர்களின் பட்டியலை முடிவு செய்தது. கடந்த, 13.03.2017 முதல் 17.03.2017 வரை தேர்வானவர்களிடம் சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் நேர் காணல் நடத்தப்பட்டது.
இறுதியில் நடைமுறையிலுள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நடவடிக்கையின் ஒவ்வொரு நிகழ்வின் முடிவும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தேர்வானவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய முதன்மைச் செயலர் மேலாண்மை இயக்குநர் ஷம்பு கல்லோ லிகர், ஆகியோர் உடனிருந்தனர்.





