அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பற்றி நாளை 17ஆம் திகதி வியாழக்கிழமை கலந்துபேசி முடிவொன்றை எடுப்போம் எனவும், அதுவரை அவசரப்படாமல் இருங்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் பற்றி கலந்துபேசி முடிவொன்றை எடுக்கலாம் எனவும், அதுவரை உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது தனித்தனியாக விமர்சனம் செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும், நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய அரசின் ஒரு பிரதான தூணாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இத்தகைய சம்பவங்களின்போது அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.





