முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் மூன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே ஒப்படைக்கப்படவுள்ளன.
மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பல்வேறு மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் ஒளி பரப்பியமைக்கான பணத்தை மீள செலுத்தாமை மற்றும் பஸில் ராஜபக்ஷ தொடர்பான ஊழல் அறிக்கைகள் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத் திறப்பு விழாவுக்காக செலவிடப்பட்ட பணத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கை, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கி சம்பளம் வழங்கியமை மற்றும் சிறப்புரிமைகள் வழங்கியமை தொடர்பான அறிக்கை, வீதி வலையமைப்பை நடைமுறைப்படுத்தும் கருத்திட்டத்திற்கமைய சட்டவிரோதமான முறையில் லான் குரூஸ் வாகனமொன்று பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட மூன்று அறிக்கைகளே இந்த வாரம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.





