கோட்டாவை கைதுசெய்து வீண் பாவம் தேடாதீர்கள்! – அரசிடம் கோருகிறது மஹிந்த தரப்பு 

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இந்த அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எதிரியாகத் திகழ்பவர் கோட்டாபய. அவர் புலிகளைத் தோற்கடித்தமைதான் இதற்குக் காரணம். இவரை எப்படியாவது கைதுசெய்து பழிவாங்கிவிடவேண்டும் என்று இவர்கள் திட்டமிடுகின்றனர்.
எக்னெலிகொடவின் கடத்தலுடன் கோட்டாவைத் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். அது முடியவில்லை. லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபடுத்த முயற்சித்தனர். அதுவும் முடியவில்லை.
சிறையில் உள்ள புலனாய்வு அதிகாரிகளை இவருக்கு எதிராகச் சாட்சி கூற வைத்துச் சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால், அந்தப் புலனாய்வு அதிகாரிகள் கோட்டாவைக் காட்டிக் கொடுப்பதற்கு மறுத்துவிட்டனர்.
இதனால் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கவைத்து கோட்டாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று அரசு முயற்சி செய்து வருகின்றது.
கோட்டா ஒரு சாதாரண மனிதர் அல்லர். இந்த நாட்டைப் புலிப் பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அவர். அவரைக் கைதுசெய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்” – என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *