ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பொது எதிரணியான மஹிந்த அணியின் 5 உறுப்பினர்கள் சு.கவின் கொள்கைகளுக்கு முரணாகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடூவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
தேசிய அரசு அமையப்பெற்றதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் பொது எதிரணியாகச் செயற்பட்டுவரும் 52 உறுப்பினர்களும் இன்னமும் சு.கவின் உறுப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இதில் 5 உறுப்பினர்கள் சு.கவுக்கு எதிராகப் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் எனவும், சு.கவின் கொள்கைப் பிரகடனத்தை மீறும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.





