ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரர் போட்டியிட முயற்சி: வாசுதேவ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு ஞானசார தேரர் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இனவாத கலவரங்களை நாட்டில் ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் இன்று இனவாத கலவரங்களோ முரண்பாடுகளோ கிடையாது.

பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கு ஒரு சில தரப்பினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கலகொட அத்தே ஞானசார தேரரைக் கொண்டு அளுத்கம பிரதேசத்தில் கலகத்தை விளைவித்து, மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் வாக்குகள் இல்லாமல் செய்யப்பட்டன. இந்த அனைத்து சதித் திட்டங்களின் பின்னணியிலும் ஐக்கிய தேசியக் கட்சியே செயற்பட்டுள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க மிகச் சிறந்த ஓர் சூழ்ச்சிக்காரர் ஆவார். சம்பிக்க ரணவக்கவே ஞானசார தேரரை இயக்கி கலகங்களை ஏற்படுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடச் செய்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கப்படுகின்றது” என தெரிவித்தார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *