மஹிந்த பற்றி தீர்மானம் எடுக்க சு.கவின் உயர்பீடம் முஸ்தீபு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் கட்சிக்கு எதிராக ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும், அவ்வாறான ஒருவரை தொடர்ந்தும் கட்சியின் போஷகராக வைத்திருப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு இடமளிக்கும் எனவும் சு.கவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“இந்தமுறை மே தினத்தில் கூட்டத்தின் தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கின்றார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 52 உறுப்பினர்கள் மே தினத்தில் அவருடன் கைகோத்துள்ளனர். இது சு.கவை இரண்டாகப் பிளவுபடுத்தும் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

இந்த வருட இறுதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அதற்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகச் செயற்படுபவர்களை ஓரம்கட்டி கட்சியைப் பலப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவின் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *