தமிழர்களை மீண்டும் ஆயுதமேந்த வைக்க முயற்சிக்கிறதா இந்த அரசு? – சிறிதரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மக்களுடைய கண்ணீருக்கும், வலிகளுக்கும் விடை கூற தவறிவரும் இந்த அரசாங்கம், தமிழர்களை மீண்டுமொரு யுத்தம் நோக்கிய பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கிறதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தொழிலாளர்களாக இருந்து அந்தந்த குடும்பங்களை வழிநடத்தி பாதுகாக்க வேண்டிய உழைக்கும் வர்க்கத்தினர், இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது பிள்ளைகளின் வரவிற்காக போராடிவரும் மக்களின் ஜனநாயக போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாது, ஜனநாயக போராட்டத்தை உதாசீனம் செய்கின்றது என்றால் மீண்டும் மக்களை இரத்த ஆற்றில் தள்ள வேண்டும் என அரசு சிந்திக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது.

காணாமல் போனவர்களை கண்டறிய எதிர்க்கட்சி என்ற வகையில் மிகுந்த விட்டுக் கொடுப்புகளுடன் செயற்பட தயாராக இருக்கின்றோம். ஆனால் எமது நல்லெண்ணத்தை இந்த அரசாங்கம் எவ்வாறு நோக்குகிறது?” என்றும் வினவியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *