முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் மைத்திரி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இந்த வருடம் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பத் திகதி, மே 18 என்று பின்னர்தான் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த உயர்மட்ட தமிழ் அரச அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இறுதிக்கட்டப் போரில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட மண்ணில் – முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடைபெறும் நாளில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *