கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார நிலையமொன்றை பொலிஸார் இன்று (புதன்கிழமை) சுற்றிவளைத்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரினால் குறித்த வீட்டை சோதனை இடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் நீதிபதியினால் மேற்படி சோதனைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உறுதிப்படுத்தியதன் பின்னர் பொலிஸ்குழு குறித்த வீட்டை முற்றுகை இட்டு நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் நாளையதினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *