அரசியல் கைதி ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் : ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகர் என்ற அரசியல் கைதி, 2008ஆம் ஆண்டு தொடக்கம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி, ஆனந்தசுதாகரின் மனைவி யோகாராணி நோயினால் மரணமானார்.

இதனால், அவர்களின் இரு குழந்தைகளும் தாயையும் இழந்து, தந்தையின் அரவணைப்பையும் பெற முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளன. தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு, ஆனந்த சுதாகரின் இரு குழந்தைகளும், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், நேற்றுமுன்தினம் ஜனாதிபதிக்கு இதுதொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு குறித்த கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.