மன்னாரில் அமைதி வழியில் பேரணி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திரி வளைவு உடைக்கப்பட்டதையும், நந்திக்கொடியை காலால் மிதித்ததையும் கண்டித்து நேற்று மன்னாரில் அமைதி வழியில் பேரணி, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அமைதிப் பேரணியாக சென்றனர். மாவட்ட செயலகத்திற்கு எதிராக, வீதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளையும் ஏந்தியபடி, அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த இந்த போராட்டத்தில், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியங்களின் பிரதிநிதிகள், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி குழு, பொதுமக்கள் என பலர் ஒன்று திரண்டிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதிக்கு எழுதப்பட்டிருந்த மகஜரை மன்னார் மாவட்ட செயலாளர் சி.ஏ.மோகன்றாஸிடம் கையளித்தார்கள்.