’20’ குறித்து சம்பந்தன் – ஹாபீஸ் மந்திராலோசனை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்றுமுன்தினம் மந்திராலோசனை நடத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் காலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸீர் அஹமட் குறித்த சட்டமூலம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது 20ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 7ஆம் திகதியே சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையில் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தொலைபேசியில் நடைபெற்ற உரையாடலில் தெளிவுபடுத்தினேன் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை, எதிர்வரும் 4ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தங்களுடன் பேசியுள்ளாரா என்று சம்பந்தனிடம் வினவியபோது, “இதுவரைக்கும் அவர் (விக்னேஸ்வரன்) என்னுடன் பேசவில்லை” என்று பதிலளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *