வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்த சதி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவருள் ஒருவர் சார்பாக, சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் ஆஜராகி வருகின்றார். இந்நிலையில், பொலிஸ்மா அதிபரது கருத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக எமது ஆதவன் செய்திப் பிரிவு வினவியபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டதைப் போன்று இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் அல்லர் எனக் குறிப்பிட்ட சட்டத்தரணி சுகாஸ், அதனை நீதிமன்றில் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை என்றும், அப்பாவிகளது கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இவ்வாறான சம்பவங்களின் போது தீர விசாரிக்காமல் பொலிஸார் அவசரப்பட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதானது, சமூகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்துவதோடு, வழக்குகளும் திசைதிருப்பப்படுமென சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் கூற்றுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நகர்வுகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக சட்டத்தரணி சுகாஸ் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *