மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், முன்பு மத்திய மின்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

மத்திய மின்துறை மந்திரியாக இருந்தபோது, பியூஷ் கோயல் தனது ‘பிளாஷ்நெட் இன்போ சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குகளை மின்துறையில் ஈடுபட்டுள்ள ‘பிரமல் குழுமத்துக்கு’ விற்றுள்ளார். பங்குகளின் முகமதிப்பை விட ஆயிரம் மடங்கு விலை வைத்து அவர் விற்றுள்ளார். இதன்மூலம், அவருக்கு ரூ.48 கோடி கிடைத்தது. இது, வஞ்சகம், சுயநலம், பேராசை சம்பந்தப்பட்ட ஊழல்.

இதுதொடர்பான ஆதாரங்கள், மேஜையில் உள்ளன. இருப்பினும், ஊடகங்கள் அவற்றை தொடாது. உண்மைக்காக போராட வேண்டிய பத்திரிகையாளர்கள், பேசாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.

பியூஷ் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

நான் மந்திரியாக பதவி ஏற்பதற்கு முன்புவரை, ஆடிட்டராகவும், முதலீட்டாளராகவும் இருந்தேன். வேலை செய்யாமல் வாழும் கலையை உங்களைப் போல் நான் கற்றது இல்லை. நான் பணியாளன். உங்களைப் போல், ‘பரம்பரை பணக்காரன்’ அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.