அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார்.

உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார்.

இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக சோனியா காந்தியின் மகனும், துணைத்தலைவருமான ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும், ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு முன் மொழிந்து ஏராளமான காங்கிரசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம் 89 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணையரான முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு ராகுல் காந்தியிடம் அவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இதைத் தொடர்ந்து அவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைவராக பதவி ஏற்றதும் அவரிடம் சோனியா காந்தி கட்சி பொறுப்புகளை ஒப்படைப்பார். ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றாலும், சோனியா காந்தி கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதோடு, சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார்.

பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *