முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,296 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களில் பல்வேறு தேவையுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில், கரைத்துரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 444 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 707 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 311 மாற்றுத்திறனாளிகளும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 443 மாற்றுத்திறனாளிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 316 மாற்றத்திறனாளிகளும், வெலிஒயா பிரதேச செயலர் பிரிவில் 75 மாற்றுத்திறனாளிகளும் வசிப்பதாக மாவட்ட செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் தமது அவயவங்களை இழந்த இம் மக்களுக்கான தேவை குறித்து, அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவர்களில் பெரும்பாலானோர் அடிப்படை வசதிகள்கூட அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இம் மக்கள் தமது வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.