நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிப்பதாக, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், தன்னுயிரை அர்ப்பணித்த பொலிஸ் அதிகாரியின் அகால மரணத்தால், துயருற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள நீதிபதிகள், சட்டத்தரணிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புக்களும் பல்வேறு நோக்கங்களை கொண்டிருந்தாலும் அனைத்தும் இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒன்று என்பதை உலக்குக்கு எடுத்துக்காட்டுவதோடு ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதை விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.