சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது.
இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும்.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.
எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்தபோது நாட்டில் டெங்கு நோய் தலைவிரித்தாடுவதால் பேராயர் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.