யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயக பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்து, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (புதன்கிழமை) 150 நாட்களை எட்டியுள்ளது.
கடந்த 150 நாட்களாக இரவு பகலாக வெயிலிலும் குளிரிலும் தமது உறவுகளுக்காய் ஏங்கித் தவிக்கும் தமது நிலை குறித்து, அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை, தமது வேதனையை பல மடங்காக அதிகரித்துள்ளதென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மக்களை பல்வேறு தரப்பினர் சந்தித்து வருவதோடு, தமது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் காத்திரமான பலன்களை எட்டவில்லை. இந்நிலையில், அரசாங்கத்தின் விசாரணைகள் மீது நம்பிக்கையற்றுப் போன மக்கள், சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி வருகின்றனர்.