“தேசிய அரசை ஸ்திரமற்ற நிலைமைக்குக் கொண்டுசெல்ல எந்தவகையிலும் இடமளிக்கப்போவதில்லை” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“தேசிய அரசைக் கவிழ்க்கப்போவதாக எண்ணிக்கொண்டு அரசிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆப்பிழுத்த குரங்குக்கு நேர்ந்த கதியே நேரும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கத் தயாராகிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களே சுயாதீனமாக இயங்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றது என்று காட்டி நாட்டுக்கு வரவிருக்கும் முதலீட்டாளர்களைத் தடுக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு செய்து எங்களது திட்டங்களை சீர்குலைத்து அரசு முன்னோக்கிச் செல்லமுடியாத நிலைமையை ஏற்படுத்த இவர்கள் எண்ணியுள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம்.
எனினும், தோல்வியடைந்தவர்களின் தேவை நிறைவேற நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
சைட்டம் மற்றும் உமாஓயா திட்டங்கள் கடந்த அரசு உருவாக்கிய பிரச்சினைகள். அரசு அந்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றது” – என்று குறிப்பிட்டுள்ளார்.