காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கத்துடன் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் ஆதங்கத்தை வெளியிட்ட உறவுகள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, அரசாங்கத்துடன் இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதோடு, இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சர் த.குருகுலராசா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.