30 வருடப் போரை விட இனவாதமே கொடியது! – அமைச்சர் சந்திம வீரக்கொடி எச்சரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“போரால் இந்த நாடு 30 வருடங்கள் மாத்திரம்தான் துன்பத்தை அனுபவித்தது. ஆனால், இனவாதத்தைத் தூண்டினால் 100 வருடங்கள் துன்பத்தை அனுபவிக்கவேண்டிவரும். பிறக்கப்போகும் குழந்தைகளைக்கூட இந்த ஆபத்து விட்டுவைக்காது.”
– இவ்வாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“போர் காரணமாக நாம் உயிர்களை மாத்திரம் இழக்கவில்லை. பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தோம். இனங்களிடையே நல்லுறவை இழந்தோம். அந்தப் போரை 30 வருடங்களுக்குப் பின் மிகவும் கஷ்டப்பட்டு நிறுத்தினோம். இனிமேல் அப்படியானதொரு நிலைமை இந்த நாட்டுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.
இப்போது நாட்டில் தேவையற்ற விதத்தில் இனவாதம் தூண்டப்படுகின்றது. பாரதூரத்தை அறியாதவர்கள்தான் இதைச் செய்கின்றனர்.இந்த இனவாதம் போரை விடவும் மோசமான விளைவுகளை நாட்டுக்கு ஏற்படுத்திவிடும்.
நாம் மிகவும் கவனமாகச் செயற்படவேண்டும். அனைத்து அரசியல்வாதிகளும் நிதானமாக வார்த்தைகளைப் பாவிக்கவேண்டும். இனவாதத்தை எவர் தூண்டினாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசு தாமதம் காட்டக்கூடாது. இனவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இந்த நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதற்காகவே நாம் தேசிய அரசில் இணைந்திருக்கின்றோம். இனவாதம் அபிவிருத்தியைத் தடுத்துவிடும். ஆகவே,  எந்தவகையிலும் நாட்டுக்குப் பயனளிக்காத இனவாதத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *