கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்த ராஜாவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமானதுடன், முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெறுகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 852 பேர் இதன்போது பட்டம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்துவ கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவபீடம், விவசாயபீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களே பட்டங்களைப் பெறுகின்றனர்.
அதிகூடிய அளவாக கலை கலாசாரத்துறைகளில் கற்ற 450 பேரும், வைத்தியத்துறையில் 50 பேரும், விவசாயத்துறையில் 11 பேரும், சித்த மருத்துவத்துறையில் 10 பேரும் பட்டம் பெறுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம், விரிவுரையாளர்கள், பட்டதாரி மாணவர்கள், அவர்களது பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழா, புதிய வேந்தர் நியமனம் இடம்பெறும் வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.