இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தன்று தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முறையில் ஒருசில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருப்பதை இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த எதேச்சதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைக்கும் எதிராக தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் டாக்டர் நளின் டீ ஹேரத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை அரச வைத்தியர்கள் சங்கம் அரசைக் கவிழ்க்கவோ, புதிய அரசொன்றை உருவாக்கவோ சதி செய்யவில்லை. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது; அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. இந்த எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக வெசாக் வாரம் முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆரோய்வோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.