87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், திம்புலாகல, தமன்கடுவ, வெலிக்கந்த, லங்காபுர, ஹிங்குராங்கொ, மெதிரிகிரிய, ஹெலஹர போன்ற பிரதேச செயலகங்களுக்கும் அனர்த்த நிலைமைகளின்போது உபயோகிப்பதற்கான அனர்த்த உதவி உபகரணத் தொகுதிகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் 47 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களும், 65 கொடை பத்திரங்களும் வழங்குவதை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதியினால் பத்து பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இதன்போது வழங்கப்பட்டன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 வீடுகளுக்கான வீடமைப்பு உதவிகளை வழங்குவதனை அடையாளப்படுத்தும் வகையில் மூன்று பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வழங்கப்பட்ட டிரெக்டர், பவுசர் என்பன எலஹெர மற்றும் லங்காபுர பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதியால் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று லொறி பவுசர்கள் மெதிரிகிரிய, தமன்கடுவ, வெலிக்கந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டதுடன், அரசினால் வழங்கப்பட்ட இதேபோன்ற லொறி பொலன்னறுவை மாவட்ட செயலகத்திற்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, வஜிர அபேவர்தன ஆகியோரும், இலங்கைக்கான சீன தூதுவர் Yang Xiuping அம்மையாரும், தமன்கடுவ பிரதேச செயலாளர் நிஸ்ஸங்க ஆரச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.