ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், செல்லத் தயார் என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் இந்த அரசாங்கத்தை பெரும் எதிர்பார்ப்புடன் அமைத்தோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் நானும் இன்னும் மனவேதனையுடன் தான் உள்ளேன். கடந்த அரசாங்க காலப்பகுதியில், துறைமுகத்தில் திருடிய பெரும்பாலான திருடர்கள் இன்று துறைமுகம் தொடர்பில் சீன அமைப்புடன் மேற்கொள்ளும் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டுள்ளனர்.
நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் எமது அமைச்சினை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கின்றோம். இது குறித்து யாரும் தற்போது தேவையற்ற விதங்களில் விமர்சிக்கத் தேவையில்லை” என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.