“காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் நீங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கும் தீர்வைப் பெற்றுத் தர முயற்சியுங்கள்.”
– இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உருக்கமாக வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவுகள் தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அந்தப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில் இதுவரை எந்தவிதமான தீர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
“இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதற்காக நடத்தப்படும் போராட்டங்களைக் கவனத்தில்கொண்டு அவற்றைத் தீர்க்க முயல்பவர்கள், எங்கள் பிரச்சினைகளை அரசிடம் கூறித் தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை” என்று தொடர் போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டனர்.
கிளிநொச்சியில் 60 ஆவது நாளாகவும், வவுனியாவில் 56 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 42 ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 37 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 47 ஆவது நாளாகவும் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.