Sunday , June 29 2025
Home / முக்கிய செய்திகள் / கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கூட்டம் ஆரம்பம்

கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கூட்டம் ஆரம்பம்

இராணுவத்தினர் வசமுள்ள கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

எனினும் இந்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்தினர் வசமுள்ள காணிளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகங்களில் கூட்டங்களை நடத்தி தீர்வு காண இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஸ்ரீலங்கா நேப்படி பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், முல்லைத்தீவு மாவட்ட கடற்படை, விமானப்படை, இராணுவ கட்டளைத் தளபதிகள், கோப்பாபுலவு மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும் இந்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டத்தின் இறுதியில் இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் பார்வையிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தமே கேப்பாபுலவில் இடம்பெற்று வருவதாக கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்காது வீதி ஒரங்களில் மக்களை காத்திருக்க வைத்திருப்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழகு இல்லையென வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv