எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
“நாம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதற்கேற்றவாறு தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆகையால்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்கினோம்.
அதனைத் தொடர்ந்து நாம் எதிர்கட்சியில் அமர்ந்துள்ளோம். இதன்படி நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க் கட்சிக்குச் சென்றவர்தான் எதிர்கட்சி தலைவராக வரவேண்டும்.
ஆனால், இவ்விடயங்களை அறியாத ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன” என ரோஹண லக்ஷ்மன் பியதாச குற்றம் சுமத்தியுள்ளார்.