கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதில், குறித்த சாரதி பந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றுள்ளார்.
குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் வைத்து நேற்று இரவு வழிமறித்து சாரதியை கைது செய்து, பரந்தன் பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது.
அனுமதிப் பத்திரத்துடன் மணல் ஏற்றிச்சென்ற நிலையில் இவ்வாறு குறித்த சாரதியை கைது செய்து துப்பாக்கியினாலும் கையினாலும் கடுமையாக தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் அதிகளவான பொலிஸார் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதேவேளை தாக்கப்பட்ட சாரதியை கைது செய்து சென்ற விசேட அதிரடிப்படையினர் இரவு 12.00 மணிவரையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது விசேட அதிரப்படையினர் முகாமிற்கோ கொண்டு செல்லப்படாது இரவு முழுவதும் ஆபத்தான நிலையில் ஏ-9 வீதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.