தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள்
ஆளுந்தரப்பினரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்திற்கு ஏறச்செய்த சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில மூத்த உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையிலேயே சிவில் அமைப்புக்கள் இதனை வலியுறுத்தியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தை வெற்றிபெறச் செய்த சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த புதிய அரசியலமைப்புக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளிலான மாநாடு கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்றது.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான சமன் ரத்னப்பிரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய, காமினி வியங்கொட, பிரிட்டோ பெர்ணான்டோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய “ஜனவரி 8ஆம் திகதி வெற்றிபெற்ற பொதுவேட்பாளர், நகர மண்டபத்தில் தனது முதலாவது ஊடக சந்திப்பின்போது, 6 மாதங்களிற்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக உறுதியளித்தார். அதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது உண்மைதான். எனினும் இன்று அதில் மந்தமான நிலை இருப்பதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்த நிலைமை தோற்கடிப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவந்து நிறைவேற்றும் கருமத்தை இந்நாட்டு புத்திஜீவிகள் அவருக்குப் பணித்துள்ளனர். 1994ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்காக முன்வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்கும் என்ற எண்ணக்கருவை நாட்டு மக்களின் சிந்தனைக்கு கொண்டுவந்தது சுதந்திரக்கட்சிதான். அதனால் சுதந்திரக் கட்சிதான் இந்த சந்தர்ப்பத்தில் முன்னோடியாகத் திகழவேண்டும். தலைமைவகிக்கவும் வேண்டும். நம்அனைவரும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்கொண்டு மக்களின் கருத்துக்கோரி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவோம் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்” – என்று தெரிவித்தார்.
இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்ணான்டோ, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அதிகாரப் பகிர்வு வழங்கி அதனூடாக முன்பிருந்த தலைவர்களுக்கு மறக்கமுடியாத பாடத்தை புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
“மஹிந்த ராஜபக்சவுக்கு மக்களை அழைத்துவந்து கூட்டத்தைக் காணிபிக்க தேவைப்பட்டது. இன்று தினமும் மாலைவேளையில் விகாரைதோறும் சென்று புதிய அரசியலமைப்பிற்கு எதிராக விசேடமாக இன ஐக்கியம், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கு எதிராக சிங்களவர்களே விழித்தெழுங்கள் என்று குரல் கொடுக்கின்றார்.
இதனைக் கூறுவதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை. தான் செய்த களவுகள், அநாவசிய விடயங்கள், படுகொலைகள், காணாமல் போகச்செய்தவை என்பவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் தினமும் தெற்கில் சிங்கள இனவாதத்தை தூண்டிவிட்டுவதன் ஊடாகவே சிறைக்கூடத்திற்குச் செல்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சென்று புதிய அரசியலமைப்பை நிறைவேற்றாவிடின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்ல முடியாது. நாட்டில் மக்கள் களைப்படைந்துள்ளனர், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன எனவே திருத்தங்களைச் செய்து அதனூடாக இதனை கைவிடலாம்தானே என இன்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் ஒருவரேனும் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கத் திரண்டவர்கள் அல்லர். ஜனாதிபதி இதுவரை முடியாது எனக்கூறவில்லை.
எந்த இடத்திலும் அரசியலமைப்பை கொண்டுவரவேண்டாம் எனக்கூறியிருக்கவே இல்லை. புதிய அரசியலமைப்பிற்கு விருப்பம் இல்லை என்றும் கூறவில்லை. மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் அதிகாரப் பகிர்வுக்கு முன்நின்று, தெற்கில் தமது நிலைப்பாட்டை அறிவித்து, தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்காமால் மஹிந்த ராஜபக்சவின் பாத்திரத்தை அவர்களும் அணிந்து நாடகத்தை அரங்றேக்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவைப் போல செயற்படாமல் தெற்கில் அவர்கள் செயற்பட வேண்டும். இதைதவிர வேறு வழியில்லை. எனவே ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றும் முதுகெலும்பு உள்ள தலைவர்களாக இருப்பதா, இல்லையா? தெற்கில் இதுபற்றி பேசுவதா, இல்லையா என்று ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கேட்கவிரும்புகின்றோம். ஆளுந்தரப்பினர் புதிய அரசியலமைப்பு மற்றும் நல்லிணக்க செயன்முறை குறித்தும் தெற்கில் பேசுவதில்லை.
எனினும் நாங்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுத்தது போன்று இன்று அனைவரும் ஒன்றிணைந்து இதுபற்றி பேசவேண்டும். புதிய அரசியலமைப்பை வெற்றிகொண்டு, முன்பிருந்த இந்நாட்டுத் தலைவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அதிகாரப்பகிர்வை வழங்க தெற்கில் முன்நின்று செயற்பட வேண்டும் என்று கோருகின்றேன்” – என்றார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு எதிராக கலகம் விளைவித்ததால் மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.