மஹிந்தவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவோம் ரணில் திட்டவட்டம்
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம் பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர திசாநாயக்கவால் எழுப்பப்பட்ட வினாவிற்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளித்து கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் மூலமாகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தற்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.




