ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா – அமெரிக்கா கூட்டுப்பயிற்சி
அமெரிக்க – ஸ்ரீலங்கா போர்க்கப்பல்கள் இன்று முதல் 10 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
பசுபிக் ஒத்துழைப்பு – 2017 எனும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று அமெரிக்க கடற்படையின் அதிவேக போக்குவரத்து கப்பலான ‘போல் ரிவர்’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஆரம்ப நிகழ்வில் தென்மாகாண ஆளுநர், தென்மாகாண முதலமைச்சர், தென்மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் செயலர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் தளபதி றியர் அட்மிரல் கப்ரியெல்சனும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
2004ஆம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இந்த பசுபிக் ஒத்துழைப்பு எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
12வது பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் இந்த பயிற்சியானது தெற்காசியாவில் நடத்தப்படும் முதலாவது பயிற்சியாகும்.
போல் ரிவர் கப்பலி்ல் 104 அமெரிக்க, ஜப்பானிய, அவுஸ்திரேலிய கடற்படை மரைன் கொமாண்டோக்கள் ஸ்ரீலங்கா கடற்படையினருடன் இணைந்து இந்த கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன், மேலும் 60 அமெரிக்க கடற்படையினரும் மரைன் கொமாண்டோக்களும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் இந்தியக் கடற்படையின் 8 வைத்தியர்கள் மற்றும் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் காரியலும் இந்தப் பயிற்சியில் இணைந்து கொள்ளவுள்ளது.
இதேவேளை இந்த பயிற்சியின் இறுதி நிகழ்வாக எதிர்வரும் 16ஆம் திகதி சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு உதவுவது என்பது குறித்த ஒத்திகையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.




