உள்ளுராட்சிமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில் எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போமென இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
“நாங்கள் கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு மிகவும் கஷ்டமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் இருக்கத்தக்க நிலையில் தேர்தலில் இணைந்து போட்டியிடும் நேசக் கட்சிகளுக்கும் ஒரு செயலாளரை சிறிகொத்தாவில் நியமிக்க வேண்டுமென நாங்கள் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கிறோம். அப்படியில்லாவிட்டால்இ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது எங்களது சாத்தியமாகாது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அடிப்படையில்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துதான் போட்டியிடவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பல இடங்களில் தனித்துப்போட்டியிட்டு கட்சியின் தளத்தை பாதுகாத்திருக்கிறோம். சில இடங்களில் விட்டுக்கொடுக்காமல் இருந்ததன் மூலம் அங்கு குறிப்பிடத்தக்களவு உறுப்பினர்களை வென்றிருக்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தகுதிபெற்றுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரு வாரங்களாக பல கட்சிகளுடன் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இறுதி முடிவெடுக்க இன்னும் ஓரிரு தினங்கள் செல்லும்.
கடந்த வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட பேச்சுகள் சம்பந்தன் ஐயா மாவை சேனாதிராஜா ஆகியோருடன் நடத்தியிருந்தோம். அதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவுடனும் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக நாங்கள் பேச்சுகள் நடாத்தியிருக்கிறோம். ஜனாதிபதி நாடுதிரும்பியவுடன் இறுதி தீர்மானங்கள் எட்டப்படும் என்றார்.