சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.
ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்றுமுன்தினம் விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.
டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பல்வேறு உடன்பாடுகளுக்கு வரமுடிந்திருப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டை இலங்கை தனது நெருங்கிய நண்பராக கருதி செயற்பட்டுவருவதுடன், எதிர்காலத்திலும் இந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பை வழங்கும் முக்கிய நாடாக ஜப்பான் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய மக்கள் குறித்து இலங்கை மக்களிடம் மிகுந்த மதிப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜப்பானிய பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கையில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சி நாடகமான ஒஷின் தொலைக்காட்சி நாடகத்தொடரில் ஒஷினின் பாத்திரத்தை ஏற்றிருந்த தொலைக்காட்சி நாடகக்கலைஞர் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.