Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை

ஆயுதங்கள் மீது முஸ்லிம்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை

நாங்கள் ஆயுதத்தின் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமூகமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக நேற்று (சனிக்கிழமை) கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டகுழுவில் அங்கம் வகித்திருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு இடம்பெற்ற சந்திப்புகளிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது. இவ்வளவு அழிவுகளும், துன்பங்களும் நடந்த பின்னரும், முஸ்லிம்கள் சட்டத்தை ஒருபோதும் கையில் எடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்றும், ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றும் சொல்லுகின்றார்கள். இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதல்ல.

அப்படியென்றால் இந்த நாட்டில் பொலிஸ் இருக்கின்றது. உளவுத்துறை இருக்கின்றது. முஸ்லிம்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஏன் அவர்களை கண்டுபிடித்து, கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாது?. அதேபோன்று, மலட்டுத்தன்மையுள்ள மருந்தை உணவுப்பண்டங்களில் முஸ்லிம்கள் போட்டு கொடுத்தார்கள் என்றால், அவற்றை ஏன் கண்டுபிடிக்க முடியாதுள்ளனர்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கிய போது, இந்தக் குற்றச்சாட்டு என் மீது எழுந்தது. நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதியே. இனவாத நோக்கத்தில் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்து, அந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போதும், இதுவரை அது வெளிப்படுத்தப்படவில்லை. சபாநாயகரிடமும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனை அவழங்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் வேண்டியுள்ளோம். இனவாதிகள் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி, முஸ்லிம்கள் மீது வீண்பழி போடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒருபோதும் தவறு செய்யவில்லை” என்றார்.

சபாநாயகர் தலைமையிலான அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், கயந்த கருணாதிலக, சுசில் பிரேம ஜயந்த, ரஞ்சித் மத்தும பண்டார, பௌசி ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், திலங்க சுமதிபால, அலிசாஹிர் மௌலானா, விஜித ஹேரத் ஆகியோர் கண்டிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …