சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள சட்டம், ஒழுங்குகள் மற்றும் நீதித்துறை அமைச்சு பதவியை எதிர்வரும் நாட்களில் முன்னால் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மூவின மக்கள் ஒன்றிணைந்து வாழும் ஜனநாயக நாட்டில் முன்னால் இராணுவ தளபதி ஒருவருக்கு சட்ட, ஒழுங்குகள் நீதித்துறை சார்ந்த அமைச்சு வழங்குவதை நாம் கண்டிக்கின்றோம். இவ்வாறு வழங்குவதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக கருதுகின்றோம்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் இன ரீதியான ஒரு போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இன ரீதியான போராட்டத்திற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர் முன்னால் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் இலங்கையர் என்ற கோட்பாட்டில் உள்ளடக்கி ஆட்சி நடத்தி வருகின்றது.
இந்த வேளையில் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை மாற்ற வேண்டும். அதன் தலைவரை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் நேரடியாக அந்த கட்சியை தேர்தலின் ஊடாக புறக்கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.