பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பின் பெயரை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.
பிரதம நீதியரசருக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால் உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசியலமைப்பு சபை, பிரியசாத் டெப்பின் பெயரை ஏகமனதாக தெரிவுசெய்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. இன்றைய தினம் ஜனாதிபதியால் குறித்த நியமனம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நீதித்துறையில் 39 வருட கால முதிர்ச்சிகொண்ட கே.ஸ்ரீபவன், ஜனாதிபதியால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




