ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐ.நா நோக்கிய பேரணியை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நேரத்தின் படி கடந்த 26 ஆம் திகதி மதியம் ஆரம்பமான குறித்த பயணம், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில், பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் ஐந்து பேர் கொண்ட குழு ஐ.நா நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பயணத்தில், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நகரத்தில் இருந்து இருவரும் பெல்ஜியம் வாழ் தமிழ் பெண்கள் மூவரும் பங்கெடுத்துள்ளனர்.
ஈருருளிப் பயணத்தை ஆரம்பிக்கும் முன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசியா பிரிவுகளுக்கான அரசியல் அதிகாரிகளையும், ஐரோப்பிய ஆணையாளரின் வெளிவிவகார பிரிவில் ஸ்ரீலங்காவிற்கான அதிகாரிகளையும் மற்றும் தெற்காசிய பிரிவுகளுக்கான அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடிய குழுவினர், ஈருருளிப் பயணம் தொடர்பான மனுவொன்றையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
ஐ.நா நோக்கி ஆரம்பமாகியுள்ள மனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் யேர்மனி, பிரான்ஸ் ஊடாக இறுதியாக சுவிஸ் – ஜெனிவா மாநகரை சென்றடையவுள்ளது.




