மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. குறுக்கு வழியில் சிலர் ஆட்சியை பிடித்துக்கொண்டு, அடுத்த 4 ஆண்டுகளில் இங்கு உள்ள வளங்களைச் சூறையாட திட்டமிட்டுள்ளனர்.
எம்எல்ஏக்களின் எண்ணிக் கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஆளுநர் ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இதைப் பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து ஆட்சியை இயக்குகிறார்.
டி.டி.வி.தினகரன் அவரது ஏஜென்ட்டாக வழி நடத்துகிறார்.திணிக்கக்கூடிய ஆட்சியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை.
தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்து உள்ளது. எனவே, தமிழக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது முடக்கி வைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி அமைய, தேர்தல் ஒன்றே வழி. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அமைய உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அதன்பிறகே, இத்திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.




