தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க.
புதிய அரசியலமைப்பை விட தேர்தல் முறை மாற்றமே மலையக மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்துமென்றும் ஆகவே தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை மாற்றம் இடம்பெறவேண்டுமென்பதை இலங்கைக்கு இந்தியா எடுத்துரைக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த இ.தொ.க. இக்கோரிக்கையை முன்வைத்தது.
மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலை துறையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை இந்தியா வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை தமிழ் முற்போக்குக் கூட்டணியினரும் சந்தித்தனர். இதன்போது, ஹட்டன் கிளங்கன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை திறப்பு விழாவில் இழுபறி நிலை காணப்பட்டு வரும் நிலையில், குறித்த வைத்தியசாலையானது மாகாண சபையை விட மத்திய அரசின் கீழ் இயங்குவதே சிறப்பாக அமையுமென்றும் அதுகுறித்தும் இலங்கை அரசிடம் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்டு வரும் 4 ஆயிரம் வீடுகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, மக்களின் நலன் கருதி எதிர்காலத்தில் மேலதிகமாக வீடுகளை அமைப்பது குறித்து இந்தியா கவனஞ்செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
இவற்றிற்கு பதிலளித்த ஜெய்சங்கர், வீட்டுத்திட்டம் குறித்து இந்தியா சாதகமான பரிசீலனைகளை மேற்கொள்ளுமென தெரிவித்ததோடு, ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.




