கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்கள் 22 ஆவது நாளாக போராட்டம்
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 22 ஆவது நாளாக கடும் பனிக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் பொதுமக்களால் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு, இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு 22 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த காணிகள் கடந்த 30 ஆம் கையளிக்கப்படும் என கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் உறுதிவழங்கிய போதிலும், காணிகளை அளவிட்டு பொதுமக்களிடம் கையளிப்பதற்கு அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, பிலவுக்குடியிருப்பு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் கொடூரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பகுதியிலுள்ள அநேகமான பொதுமக்களின் காணிகளை ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினர் கையகப்படுத்தியிருந்தனர்.
கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணியை சூழ விமானப் படையினர் முட்கம்பி பாதுகாப்பு வேலியை அமைத்திருந்த போதிலும், அங்கு பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்களை அழைத்திருந்த விமானப் படையினர், குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனவள அதிகாரிகளிடம் கடிதங்களை பெற்று மீளக்குடியேற முடியும் எனவும் தெரிவித்திருந்தனர்
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேரில் சென்று இதுகுறித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் வினவியிருந்தனர்.
குறித்த காணிகள் பிரதேச செயலகப் பிரிவினால் வழங்கப்பட்டவை என்பதால், ஜனவரி 23 ஆம் திகதி அவர்களுடன் வருமாறும் காணிகளை கையளிப்பதாகவும் வனவளப் பாதுகாப்பு பிரிவினர் கூறியிருந்தனர்.
எனினும் இன்றுவரை குறித்த காணியை வனவளப் பாதுகாப்புப் பிரிவினர் வழங்காத நிலையில், பிலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்பாக பொதுமக்கள் தொடர்ச்சியாக 22 ஆவது நாளாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தற்போது சூரியபுரத்திலுள்ள மாதிரிக் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் பிலவுக்குயிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.