முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாமிற்கு அருகில் மேலும் பல மனித எச்சங்கள்
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில், ராணுவ முகாமிற்கு அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், மண்மாதிரிகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டு மேற்படி எச்சங்கள் பகுப்பாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்திற்கு மேலதிக நீதவானும் , மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் ஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி, சிரேஷ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பி.சி. சுரங்க பெரேரா, கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அஸித்த கீர்த்தி, மாத்தளை பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர் டி.ஐ.வைத்தியலங்கார, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த ஆகியோர் அடங்கிய விஷேட குழு விஜயம் செய்திருந்தது.