இராணுவத்தின் பாலியல் முகாம்களில் தமிழ் பெண்கள்
ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக தடுத்து வைத்திருந்ததுடன், பாலியல் முகாம்களையும் வைத்திருந்ததாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களை நடத்தியது மற்றும் ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்கொடுமைகளுடன் தொடர்புடையதாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆறு பேரின் விபரங்களையும் இரகசிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.ரி.ஜே.பி என்ற சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் ஐ.நா விடம் கையளித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் தலைமையகத்தில் பெண்களுக்கு எதிரான அனைத்துவித ரபட்சங்களையும் இல்லாதொழிக்கும் ஐ.நா குழுவின் கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற மாலை நேர அமர்வில் இலங்கையில் போர் காலத்திலும் அதற்குப் பின்னரும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் உட்பட கொடூரங்கள் தொடர்பில் யஸ்மின் சூக்கா தலைமையிலான ஐரிஜே.பி உள்ளிட்ட பல அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்தன.
முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் கணவன்மாரை இழந்த பெண்கள் ஆகியோர் போர் இடம்பெற்ற பகுதிகளில் தொடர்ந்தும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருவதாகவும் இதன்போது அறிக்கை சமர்ப்பித்த பிரதிநிதிகள் ஐ.நா குழுவிடம் சுட்டிக்காட்டினர். இந்த நிலையிலேயே ஐ.நா குழுவிற்கு ஐ.ரி.ஜே.பி அறிக்கையொன்றை கையளித்துள்ளது.
இதில் நாளை 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகளை சந்திக்கும் போது பாலியல்முகாம்கள் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகள் தொடர்பிலான விபரங்களை கையளித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அழுத்தும் கொடுக்குமாறு ஜஸ்மீன் சூக்கா தலைமையிலான ஐ.ரி.ஜே.பி பெண்களுக்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடர்பான ஐ.நா குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரச தரப்பினால் ஐ.நா குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதிக்குள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் 18 சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றிருக்கின்றன.