ஐ.நா.ஆணையாளரின் அறிக்கை மிகக் காட்டமாகவே வெளிவரும்?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் இம்முறை நடைபெறும் கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை மிகக் காட்டமானதாகவும், எச்சரிக்கை மிகுந்ததாகவும் அமையும் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34ஆவது அமர்வு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அமர்வின் முதல் நாளில் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் உரையாற்றவுள்ளதோடு ஸ்ரீலங்கா தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிடவுள்ளார்.
ஸ்ரீலங்கா தொடர்பில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் குறிப்பிடுவார் என்றும், ஐ.நா. மனித உரிமை கள் ஆணையாளரது ஸ்ரீலங்கா தொடர்பான நிலைப்பாடு மிகக் காட்டமானதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவொரு எத்தனமும் காண்பிக்காதது தொடர்பிலும், பிரேரணையில் மாற்றம் மேற்கொள்ள முயற்சிப்பது தொடர்பிலும் காட்டமான விமர்சனத்தை ஆணையாளர் முன்வைப்பார் என்று அறியமுடிகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் அவரது அலுவலகம், ஸ்ரீலங்காவின் தேசிய அரசு தொடர்பில் 2015ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்போது கொண்டிருந்த அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் செயற்பாடுகளில் விசனம் – நம்பிக்கையீனம் அடைந்துள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களது செயற்பாடு காணப்படுவதாகவும் ஜெனிவாத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா. மேற்பார்வையுடன் கால நீடிப்பு வழங்கப்பட்டால், அந்தக் காலத்தினுள் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கால அட்டவணை இருக்க வேண்டும் என்பதோடு ஒவ்வொரு அமர்விலும் முன்னேற்ற – இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.