நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.
நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் செவ்வியொன்றை வழங்கினார். இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற கண்ணன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்ல எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத பிரசித்தி பெற்ற சமூக சேவையாளருமாவார். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் கூற்றுப்படி சட்டமா அதிபரின் அங்கீகாரம் இன்றியும் ஒரு தமிழ் அரசியல் கட்சியின் சிபார்சும் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்கவும் இந்நியமனம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இராமநாதன் கண்ணன் அவர்கள் 10 தடவைகளுக்கு மேலாக இதே சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய தகுதியைக் கொண்டிருந்தார் என்பதுகூட பீரிஸ் அவர்களுக்குத் தெரியாமல் போனது துரதிஷ்டமே. அதே நேரத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் சில அரசியல் கட்சிகளின் அதியுயர் பீட உறுப்பினர்களைக் கூட நீதிபதிகளாக நியமித்த கைங்கரியங்களை மறந்து சட்ட வல்லுனர்களைப் பற்றி பேராசிரியர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தது அவருடைய இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.
கண்ணன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் உபதலைவராக அரும்பணியாற்றியவர் என்ற வகையிலும் எங்கள் சபையின் பெறுமதி வாய்ந்த உறுப்பினர் என்ற வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் பேராசிரியர் பீரிஸின் இனத்துவேஷ அறிக்கையை மேலும் கண்டிக்கின்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.