டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் கடும் குளிரும் காணப்படுகிறது. காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
28 ரயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலையில் குறைந்த தூரமே கண்ணுக்கு புலப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. டெல்லியில் இன்று குறைந்த பட்ச வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று, தலைநகர் பகுதியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியிருந்தது. கடந்த சில நாட்களாக டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை வேளையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாக மாறியுள்ளது. செவ்வாய்க்கிழமை, உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ- ஆக்ரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் 10 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.