குமரன் பத்மநாதன் குற்றமற்றவர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுமீது விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத் தீர்மானித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய குமரன் பத்மநாதனுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், மனுதாரர் குறிப்பிட்ட அனைத்து குற்றச்செயல்களுடனும் பிரதிவாதியான குமரன் பத்மநாதனுக்கு தொடர்பில்லை என்பது பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளினூடாகத் தெளிவாவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *